அம்மன் சிலை தாலியை பறித்தவர் விரட்டிப் பிடிப்பு!
சென்னை: அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த தாலியை திருடிக் கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் முத்தையா தெருவில் பெரிய பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மன் சிலைக்கு தங்கத்தில் தாலி அணிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை இங்கு தேனாம்பேட்டையைச் சேர்ந்த முருகன் (30) என்பவர் சாமி கும்பிட வந்தார்.
நீண்டநேரம் கோவில் முன்பாகவே அமர்ந்திருந்தார். செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பெண்கள் அம்மனை வழி பட்டனர்.
கூட்டம் குறைய தொடங்கியதும், முருகன் மீண்டும் சாமி கும்பிடுவது போல் கோவிலுக்குள் சென்றார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த தங்க தாலியை பறித்துக் கொண்டு ஓடினார்.
ஆனால் இதை ஒரு பெண் பார்த்து விட்டு, அம்மன் தாலியை எடுத்துக் கொண்டு ஓடுகிறான், பிடியுங்கள் என்று கூக்குரலிட்டார்.
இதையடுத்து அப்பகுதியினர் மொத்தமாக திரண்டனர். முருகனை விரட்டிக் கொண்டு ஓடினர். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ஓடிய பின்னர்தான் முருகன் பிடிபட்டார். மக்கள் அவரை அடித்து உதைத்தனர்.
அதன் பின்னர் அவரை ஐஸ் ஹவுஸ் போலீஸாரிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். விசாரணையில் ஏற்கனவே கேபிள் டிவி ஒயரை அறுத்ததாக முருகன் மீது ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் வேறு ஒரு கோவிலிலும் இதேபோல அவர் நகை திருடியதும் தெரிய வந்தது.