ஜெ.வை மக்கள் புறக்கணித்து விட்டனர்-காங்கிரஸ்
சென்னை: தேர்தல் புறக்கணிக்கச் சொன்ன ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
காங்கிரஸ் தலைமையகத்தில் தியாகி சத்தியமூர்த்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அப்போது நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
நடந்து முடிந்த 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் பெருமளவில் சென்று வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலை புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அதை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரத்தை ஏற்று ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
திருமாவளவன் மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து பிரசாரம் செய்கிறார். மத்திய அரசையோ, சோனியாவையோ, பிரதமரையோ குறை கூறும் தகுதி யாருக்கும் கிடையாது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்ர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. பாஜகவுடன் திமுகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.