மதுரையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் தப்பியோட்டம்
மதுரை: மதுரையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இருவர் தப்பி ஓடி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் பிரவீன். இவர் மும்பையில் பணியாற்றி வந்தார். அதே போன்று, மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தவர் சுப்பிரமணியம். இவர்களுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது.
இதனையடுத்து, இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இரவு 7 மணி அளவில் இவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தப்பியோடிய பிரவீன், சுப்பிரமணியம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து, அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் 111 பேருக்குப் பாதிப்பு - புதுவையில் 4 பேர்
இந்த நிலையில் தமிழகத்தில் 111 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நான்கு பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் தமிழகத்தில் ஐந்து பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
சிறார்களே அதிகம் பாதிப்பு...
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துரை இயக்குநர் எஸ்.இளங்கோ கூறுகையில், பாதிக்கப்பட்ட 111 பேரில் 62 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆவர்.
பாதிக்கப்பட்டோரில் 55 பேருக்கு சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். மற்றவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ. 7 லட்சம் நிதியுதவி கேட்டு மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.
கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்த 4 லட்சத்து 50 ஆயிரத்து 498 பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
புதுச்சேரியில் நான்கு பேர் பாதிப்பு...
இதற்கிடையே, புதுச்சேரி மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஜிப்மரில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.கே.தாஸ் கூறுகையில், மொத்தம் 30 பேரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. அதில் நான்கு பேருக்கு இதுவரை பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
நாடு முழுவதும் 2000 பேர் பாதிப்பு...
இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை பன்றிக் காய்ச்சலால் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 99 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று பாதிப்புக்குள்ளானவர்களில் அதிகபட்சமாக பெங்களூர், மும்பையில் தலா 20 பேரும், புனேவில் 18 பேரும் ஆவர். டெல்லியில் 10 பேருக்கு நேற்று பன்றிக் காய்ச்சல் உறுதியானது.












Click it and Unblock the Notifications