ஸ்வைன்: மேலும் 3 பேர் - இதுவரை 38 பேர் மரணம்
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த 38 வயதுப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார். அவரைத் தொடர்ந்து 31 வயது வாலிபரும் இன்று இறந்தார்.
பெங்களுரில் நேற்று 45 வயதான எட்வர்ட் டேவிட், 36 வயதான கல்பனா ஆகியோர் பன்றிக் காய்ச்சல் நோய்க்குப் பலியாயினர். இதில் டேவிட், கன்னிங்காம் ரோட்டில் உள்ள ஷிபா மருத்துவமனையிலும், கல்பனா மத்திகரேயில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையிலும் பலியாயினர்.
அதே போல மகாராஷ்டிர மாநிலம் ஓளரங்காபாத்தில் அர்ஜூன் பிகாரி என்ற 40 வயது விவசாயியும் பலியாகியுள்ளார்.
புனேவில் விஜய் அவகடே என்பரும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இவரைத் தவிர புனே சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
நாசிக்கில் மேலும் 2 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானாதாக செய்திகள் வந்தாலும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இவர்கள் தவிர உத்தரகாண்ட், சட்டீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் 38 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
இதில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 20 பேரும், இதில் 15 பேர் புனேவைச் சேர்ந்தவர்கள், கர்நாடகத்தில் 7 பேரும், குஜராத்தில் 4 பேரும், டெல்லி, சட்டீஸ்கரில் தலா இருவரும், தமிழகம், உத்தரகாண்ட், கேரளத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
நேற்று மட்டும் 216 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் 48 பேரும், புனேவில் 36 பேரும், சென்னையில் 30 பேரும், டெல்லியில் 25 பேரும் அனுமதிக்கப்ப்டடுள்ளனர்
இதனால் இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 2,242 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications