பன்றிக் காய்ச்சல்-புனே, மும்பைக்கு அடுத்து சென்னையில் அதிகம் பேர் பாதிப்பு

பன்றிக் காய்ச்சலால் மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் புனே நகரில்தான் பெரும் பாதிப்பு காணப்படுகிறது. அடுத்து மும்பையிலும் பன்றிக் காய்ச்சல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை நகரிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் 30 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி மாணவர் பாதிப்பு...
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் அவர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தண்டையார்பேட்டை மருத்துவமனையில் தற்போது 39 பேர் பன்றிக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று மேலும் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஒருவருக்கு..
தூத்துக்குடி கடலோர காவல் படை ஊழியர் ஒருவர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கேஆர் நாயர். இவர் தூத்துக்குடியி்ல் உள்ள இந்திய கடலோர காவல்படையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து கப்பல் படை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து அவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள கடலோர காவல்படை மருததுவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்றி காய்ச்சல் இருக்கலாம் என தெரிவித்தனர்.
தற்போது அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முகமூடிகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும்:
இந் நிலையில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுக்க தேவைப்பட்டால் பாதுகாப்பு முகமூடிகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனுவில்,
பன்றிக் காய்ச்சல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோயைத் தடுப்பதற்காக பாதுகாப்பு முகமூடிகளை அரசு வழங்கவில்லை.
தனியார் மருத்துவமனைகளும் இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க மறுத்துவிடுகின்றன. சென்னை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனைக் கூடத்தில் மட்டுமே பன்றிக் காய்ச்சலை பரிசோதனை செய்வதற்கான வசதி உள்ளது. இந்த மையத்தில் சோதனைக் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் ஏராளமான நோயாளிகள் காத்திருக்கின்றனர்.
பாதுகாப்பு முகமூடிகள் தற்போது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பன்றிக் காய்ச்சல் நோயை ஒழிப்பதற்காக அனைவருக்கும் இலவச முகமூடியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
கிங் பரிசோதனைக் கூடத்தில் தேவையான சோதனைக் கருவிகளை வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பன்றிக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தேவைப்பட்டால், பாதுகாப்பு முகமூடிகளை இலவசமாக வழங்க தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் இதுகுறித்து இறுதி முடிவை தமிழக அரசுதான் எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications