நாளை வாக்கு எண்ணிக்கை-தட்ஸ்தமிழில் 'லைவ்'
பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
கம்பம் தொகுதியில் 76.2 சதவீதமும், ஸ்ரீவைகுண்டத்தில் 72.46 சதவீதமும், பர்கூரில் 71.02 சதவீதமும், இளையான்குடியில் 67.02 சதவீதமும், தொண்டாமுத்தூரில் 58.16 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.
இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன.
11 மணிக்குள் முடிவு தெரியும்...
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள்.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 11 மணிக்கெல்லாம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அப்-டேட்டை நாளை காலை 8 மணி முதல் தட்ஸ்தமிழில் பார்க்கலாம்.
எங்கெங்கு எண்ணப்படுகின்றன...?
தொண்டாமுத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை, கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாக கட்டடத்தில் நடைபெறுகிறது. இதற்காக, 2 அறைகளில் தலா 14 மேஜைகள் வீதம் 28 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கான வாக்குகள், சாயர்புரம் போப் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படும்.
பர்கூர் தொகுதி ஓட்டுக்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், இளையாங்குடி ஓட்டுக்கள் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படும்.
கம்பம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்னணி நிலவரம் தெரிய வரும். 11 மணிக்கு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.