5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி
பர்கூர், தொண்டா முத்தூர், இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு வேண்டுகோளையும் மீறி 69.4 சதவீத ஓட்டுகள் பதிவாயின.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்றிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்றனர்.
பர்கூர், இளையான்குடி, கம்பம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வென்றுள்ளனர்.
அனைத்துத் தொகுதிகளிலும் விஜய்காந்தின் தேமுதிக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இடதுசாரிகளும் பாஜகவும் அனைத்திலும் டெபாசிட் இழந்துள்ளன.
தொண்டாமுத்தூரில் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்ற கழகம் கட்சியும் டெபாசிட்டை இழந்தது.
அதேபோல 5 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைகளும் டெபாசிட் இழந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதி வாக்குகள் கோவை தடாகம் சாலை அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி வாக்குகள் சாயர்புரம் போப் கல்லூரியிலும்
பர்கூர் தொகுதி வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், இளையாங்குடி தொகுதி வாக்குகள் இளையாங்குடி மேல்நிலைப் பள்ளியிலும், கம்பம் தொகுதி வாக்குகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலும் நடந்தன.