சோமாலியாவில் உள்நாட்டு கலவரம்-40 பேர் பலி
மொகதிசு: சோமாலியாவில் ஐநாவினால் அமைக்கப்பட்டுள்ள அரசு படைகளுக்கும், உள்ளூர் தீவிரவாத இயக்கத்துக்கும் இடையே நடந்த சண்டையில் சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர்.
சோமாலியாவில் கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு கலவரங்கள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஐநாவின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டுள்ளது. அரசு படைகளுக்கு துணையாக ஆப்ரிக்க யூனியன் அமைப்பின் படைகளும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சோமாலியாவில் இருக்கும் அல் ஷபாப் என்ற அமைப்பு நாட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இஸ்லாமிய சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது. இதையடுத்து தலைநகர் மொகதிசுவில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
தாலிபான்களுக்கு இந்த அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி அமெரிக்க அரசு இதை கடந்த ஆண்டு இவர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ந்தது. தற்போது ஆஸ்திரேலியாவும் இவர்களை தீவிரவாதிகள் வரிசையில் சேர்க்கவுள்ளது.
இந்நிலையில் நேற்று சோமாலியா ராணுவம் மொகதிசுவின் புறநகரில் அல் ஷபாப் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி ஒன்றில் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் ஷபாப் அமைப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் இன்று அதிகாலையில் அரசு படை மீதும், மக்கள் நடமாடும் பகுதிகளிலும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
மொகதிசு நகரின் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலில் பொது மக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். மற்ற இடங்களில் நடந்த தாக்குதலில் 34 பேர் என மொத்தம் 40 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 40 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications