தமிழகத்துக்கு ரூ.450 கோடி வறட்சி நிவாரண நிதி! - வீரபாண்டி ஆறுமுகம்
டெல்லி: தமிழகத்தில் விவசாயப் பயிர்களைக் காக்க இந்த பருவத்துக்கு தேசிய பேரிடர்பாட்டு நிதியிலிருந்து ரூ.325 கோடி உதவி வேண்டும் என தமிழக விவதசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பாசனத் தேவைகளுக்காக கூடுதலாக 800 மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் இதற்கென ரூ.125 கோடியை தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
டெல்லியில் நடந்த மாநில விவசாயத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற வீரபாண்டி ஆறுமுகம், தமிழகத்தின் விவசாயத் தேவைகளுக்காக பல கோரிக்கைகளை முன் வைத்தார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு மிகக் குறைந்த நிலப்பரப்பில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக 19.28 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படும், இந்த ஆண்டோ வெறும் 7.26 ஹெக்டேரில்தான் பயிரிடப்பட்டுள்ளது.
எனவே இப்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் பேரிடர் நிவாரணத் தொகையான ஹெக்டருக்கு ரூ.4000 என்ற அளவை ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும்.
விவசாயம் நடைபெறும் பகுதிகளில் பயிர்களைக் காக்க அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது ரூ.165 கோடி செலவில் காவேரி - குண்டாரு திட்டமும், ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாறு-நம்பியாறு திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய அரசு விரைவில் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தை கையிலெடுக்க வேண்டும், என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.