பாலாறு- ஆந்திராவை வளைக்க அண்ணாவைப் பயன்படுத்தும் தமிழக அரசு
சென்னை: திருவள்ளுவர், சர்வக்னர் சிலைகள் திறப்பின் மூலம் கர்நாடகத்துடனான உறவையும், நட்பையும் வலுவாக்கிக் கொண்டு விட்ட நிலையில், தற்போது அண்ணா நூற்றாண்டு விழாவை முன்வைத்து ஆந்திராவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளவும், பாலாறு பிரச்சினைக்குத் தீர்வு காணவும் களம் இறங்கியுள்ளது திமுக அரசு.
தமிழக அரசு சமீபகாலமாக அண்டை மாநிலங்களுடனான உறவை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. சமீபத்தில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையும் திறக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களுக்கு இடையே இருந்த கசப்புணர்வுகள் மறக்கப்பட்டு சுமூக உறவு வளர்ந்து வருகிறது.
மற்றொரு அண்டை மாநிலமான ஆந்திரா நமக்கு எப்போதும் நட்புடையதாக தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது சித்தூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட மேற்கொண்டு வரும் ஆந்திர அரசின் நடவடிக்கை இரு மாநிலங்களின் உறவில் லேசான விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் வட தமிழகம் வறண்டு போய்விடும் என்பதால் இதை தடுக்க தமிழகம் முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் முறையிட்ட தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவை சென்னைக்கு அழைத்து வந்து அவரது வாயால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணலாம் என கூற வைத்ததை போல் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும் மடக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
இதற்கு அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கவிருக்கும் அண்ணா நூற்றாண்டு விழாவை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் ராஜசேகர ரெட்டியை பங்கேற்க வைக்கும் முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.
இதற்காக தமிழக அரசின் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி நேற்று ஹைதராபாத்துக்கு நேரடியாக சென்று ஆந்திர முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
5 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்...
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
அண்ணா நூற்றாண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இந்த விழாவுக்கு ஆந்திர முதல்வர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
விழாவை முன்னி்டடு மத்திய அரசு, அண்ணாவின் பேச்சுக்களையும் ஆயிரக்கணக்கான பிரதி எடுத்து வினியோகிக்க இருக்கிறது. மேலும், 5 ரூபாய் நாணயங்களை வெளியிட இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications