கோத்ரா ரயில் எரிப்பில் தொடர்புடைய குற்றவாளி பாக். எல்லையில் கைது
ஜெய்சால்மர்: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் வெடிக்க மூல காரணமான ரயில் எரிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய, நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான இப்ராகிம் தாண்டியா என்பவரை பாகிஸ்தான் எல்லை அருகே வைத்து போலீஸார் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூர் இடையே இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரயிலில் இப்ராகிம் தனது மனைவியுடன் சனிக்கிழமை பயணம் செய்தார்.
பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பார்மர் மாவட்டம் முனாபாவோ ரயில் நிலையத்தில் நேற்று இரவு இப்ராகிம் இறங்கினார்.
அங்கு இப்ராகிமின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இப்ராகிமைக் கைது செய்தனர்.
கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து இப்ராகிம் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
குஜராத் மாநிலம் பஞ்ச் மஹால் (கோத்ரா இந்த மாவட்டத்தின் தலைநகராகும்) மாவட்டத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம்.
இப்ராகிம் குறித்து பஞ்ச்மஹால் எஸ்.பி. மோதலியா கூறுகையில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புச் சம்பவத்தி்ல 58 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த 3 தினங்களுக்குப் பின்னர் இப்ராகிமுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
கோத்ரா சதித் திட்டத்தை தீட்டிய முக்கிய குழுவில் இப்ராகிமும் ஒருவர் ஆவார் என்றார்.
2002ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது. அன்றிலிருந்து நேற்று முன்தினம் வரை இப்ராகிம் தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் சம்பவத்திற்குப் பின்னர் தப்பி ஓடி விட்ட இப்ராகிம், 2004ம் ஆண்டு பாகிஸ்தானின் நியூ கராச்சி நகரில் தங்கினார். அவருடன் அவரது மனைவியும் தங்கியிருந்தார்.
ஐ.எஸ்.ஐதான் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
நேற்று முன்தினம் முனாபாவோ ரயில் நிலையத்தில் இப்ராகிம் பிடிபட்டபோது அவரிடம் இருந்த பாஸ்போர்ட் 2007ம் தேதிய காலாவதியாகி விட்டது தெரிய வந்தது. அதை மோசடியாக மாற்றி 2017 வரை செல்லத்தக்கதாக மாற்றியிருந்தார் இப்ராகிம்.
இப்ராகிமை மட்டும் கைது செய்த அதிகாரிகள், அவருடைய மனைவி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால் அவரை விடுவித்து விட்டனர்.
தற்போது இப்ராகிமை தங்களது காவலில் எடுக்க கோத்ரா போலீஸார் ஜோத்பூர் விரைந்துள்ளனர்.