சொத்து கணக்கை வெளியிட்ட பஞ்சாப் நீதிபதி-தமிழகத்தை சேர்ந்வர்
டெல்லி: பஞ்சாப்- ஹரியானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கே.கண்ணன் தனது சொத்துக் கணக்கை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
நீதித்துறையில் ஊழல் மலிந்து வருவதால், நீதிபதிகளும் தஙகளது சொத்துக் கணக்குகளை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, நீதிபதிகள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை தெரிவிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. அதேசமயம், தாங்களாகவே முன்வந்து நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கைக் காட்டலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சைலேந்திர குமார் என்பவர் கண்டனம் தெரிவித்திருந்தார். மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்காக பேச கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் இதை கே.ஜி.பாலகிருஷ்ணன் நிராகரித்துள்ளார். இந்தியாவில் உள்ள உயரிய நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்காக பேச எனக்கு முழு அதிகாரமும் உள்ளது. சைலேந்திர குமார் விளம்பரப் பிரியர். விளம்பரத்திற்காக இவ்வாறு பேட்டி அளித்துள்ளார் என்று சாடியுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் தனது சொத்துக்கள் குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 600 நீதிபதிகளிடம் சொத்துக் கணக்கை கேட்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். கண்ணனுக்கும் இந்தக் கடிதம் போயிருந்தது.
இந்தக் கடிததத்திற்குப் பதிலளித்துள்ள கண்ணன் அதில் தனது சொத்துக் கணக்கையும் தெரிவித்துள்ளார்.
அதில் தனது சொத்தாக கண்ணன் தெரிவித்துள்ளதாவது...
கண்ணன் பெயரில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 3.87 லட்சம் முதலீடுகள். மனைவி பெயரில் ரூ. 10.59 லட்சம் வங்கி முதலீடு என தெரிவித்துள்ளார் நீதிபதி கண்ணன்.
மேலும் தனது பிளாக்கிலும் இதுகுறித்து அவர் எழுதியுள்ளார்.
நீதிபதி கண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி பிரபல வழக்கறிஞர். சட்டம் முடித்த பின்னர் தந்தையிடமே ஜூனியராக பணியாற்றினார் கண்ணன்.
சென்னை நீதிபதியும் முன்வருகிறார்..
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதி ஒருவரும் தனது சொத்துக் கணக்கை தெரிவிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications