சவப்பெட்டி ஊழல்: காங். மன்னிப்பு கேட்க வேண்டும்-பெர்னாண்டஸ்
டெல்லி: சவப்பெட்டி ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் எனது பெயர் இடம்பெறவில்லை. தேவையில்லாமல் என் மீது பழி சுமத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை அடக்கம் செய்ய அமெரிக்காவில் இருந்து சவப்பெட்டி வாங்கப்பட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாக கடந்த 2002ல் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்க்கு இதில் தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கடந்த 19ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மூன்று ராணுவ அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என நான்கு பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. ஆனால், ஜார்ஜ் பெர்னாண்டஸ்க்கும் இந்த வழக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவிட்டது.
இது குறித்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறுகையில்,
எனக்கு சிபிஐயின் நற்சான்றிதழ் தேவையில்லை. சவப்பெட்டி ஊழலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. சவப்பெட்டிகள் வாங்கும் விவகாரம் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ரத்தங்களை குடித்ததாக தவறான குற்றச்சாட்டை தெரிவித்த காங்கிரஸ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications