ராகிங்-3 சென்னை ஐஐடி மாணவர்கள் விடுதியிலிருந்து நீக்கம்
சென்னை: ராகிங் செய்த சென்னை ஐஐடி மாணவர்கள் மூன்று பேரை விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு நீக்கி சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் சமீபத்தில் மூன்று சீனியர் மாணவர்கள் மீது ராகிங் குற்றச்சாட்டு புகார் செய்யப்படடது. இதை விசாரித்த நிர்வாகம் அந்த மூன்று மாணவர்களையும் கடந்த 18ம் தேதி விடுதியில் இருந்து வெளியேறும்படி கூறியுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடியை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
இந்த மூன்று மாணவர்களும் ஐஐடியின் அலக்நந்தா விடுதியில் தங்கியிருந்தவர்கள். அவர்கள் ஜூனியர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. அதில் உண்மை இருந்ததால் அவர்கள் மூவரும் கடந்த வாரம் விடுதியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் ஒரு ஆண்டுக்கு விடுதி பக்கம் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஐஐடி நிர்வாகம் இந்த பிரச்சனையில் ராகிங் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறாக நடத்து கொண்டனர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது.