தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில் இடையில் என்.கே.கே.பி.ராஜா, பூங்கோதை ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். பூங்கோதை மட்டும் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.
மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகனிடம் நீண்டகாலமாக இருந்த பொதுப்பணித் துறையை அவரிடமிருந்து சமீபத்தில் பறிக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாபலிபுரத்தில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் ஓய்வெடுத்த முதல்வர் கருணாநிதி அமைச்சரவை மாற்றம் குறித்து நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கோ.சி.மணியை பதவியிலிருந்து விடுவிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் மொய்தீன்கான் உள்ளிட்ட சிலரும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து கம்பம் இடைத் தேர்தலில் வென்ற கம்பம் ராமகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று தெரிகிறது.