சொத்து கணக்கு-அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் சொத்து கணக்கை காட்டாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசுகையில்,
புதுச்சேரியில் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையில் உள்ள அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் அனைவரும் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் நன்னடத்தை விதிகளின்படி தங்கள் சொத்துகளைக் கணக்கு காட்ட வேண்டும்.
தற்போது புதுச்சேரியில் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் 3,850 பேர் உள்ளனர். இதில் 820 பேர் மட்டும் தங்களது சொத்துகளைக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் கணக்கை காட்டவில்லை.
அகில இந்திய அளவில் இப்போது நீதிபதிகள் கூட தங்களது சொத்து கணக்கைக் காட்டும் நிலை வந்துள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிடும் நாங்களும் சொத்துக் கணக்கை காட்டுகிறோம். எனவே, அரசு அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்குப் முதல்வர் வைத்தியலிங்கம் பதில் அளித்து பேசுகையில்,
இந்த விவகாரத்தில் அரசுக்கு மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. எனவே, சொத்துக் கணக்கை காட்டாத அதிகாரிகளிடமிருந்தும் சொத்து கணக்கு தாக்கல் செய்ய உரிய வடிக்கை எடுக்கப்படும் என்றார்.