சிமென்ட் நிறுவனங்களுக்கு அரசு கோரிக்கை
சென்னை: சிமென்ட் நிறுவனங்கள் தங்களிடம் தேங்கியிருக்கும் கழிவு பொருட்களை மறுசுழற்சியின் மூலம் ஆற்றல் மூலங்களாக மாற்றி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன் கான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சிமென்ட் ஆலைகளில் கழிவு பொருள் நீக்கம் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதை மைதீன் கான் துவக்கி வைத்து பேசுகையில்,
சிமென்ட் தொழிற்சாலைகள் தங்களிடம் இருக்கும் அபாயகரமான கழிவுகளை தேக்கி வைப்பதற்கு பதிலாக அதன்மூலம் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆற்றல் மூலங்களை தயாரிக்க முன்வர வேண்டும்.
இந்த கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயராக இருக்கிறது.
இந்த வாரியம், தமிழக அரசுடன் இணைந்து கும்மிடிப்பூண்டியில் ஒரு தொழிற்சாலை துவக்க இருக்கிறது. இங்கு கழிவு பொருட்கள் ஆவியாக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும்.
தமிழகத்தில் தற்போது இருக்கும் 2,655 தொழிற்சாலைகள் ஒரு ஆண்டுக்கு 3.14 லட்சம் டன் கழிவை உருவாக்கி வருகின்றன. அதேபோல் நாடு முழுவதும் தினமும் 40 முதல் 50 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கூடுதலாக மண்ணில் புதைக்கப்படுகிறது.
தற்போது ஒரு நிறுவனம் இந்த கழிவுகளை மறுசுழற்சியின் மூலம் ஆற்றல் சக்திகளாக மாற்ற முன் வந்துள்ளது. சுற்றுப்புறு சூழலை காக்கும் இது போன்ற நடவடிக்கைகள் வரவேற்படுகின்றன என்றார்.