கருணாநிதிக்கு பாரதரத்னா-புதுச்சேரி சட்டசபையில் அமளி
புதுச்சேரி: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா தரப்பட வேண்டும் என்று திமுக சார்பில் புதுச்சேரி சட்டசபையில் திமுக கோரிக்கை வைத்தது. இதைக் கடுமையாக கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று பேசிய திமுக உறுப்பினர்கள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாரதரத்னா தர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.
இதையடுத்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் இதைக் கடுமையாக ஆட்சேபித்து குரல் கொடுத்தனர். பதிலுக்கு திமுக எம்.எல்.ஏக்களும் பேசியதால் சபையில் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் உள்ளே வந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே புகுந்து அதிமுக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு போய் விட்டனர்.