ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மசாஜ்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் உடல் மசாஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் நோயாளிகளுக்கு எளிய மற்றும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் மருத்துவமனைகளின் சித்தா பிரிவில் நடை பயிற்சி இயந்திரம், நீராவி குளியல் இயந்திரம், சைக்கிளிங் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் அருணாசலம் கூறுகையில்,
மனிதன் உடலில் நாடி நரம்புகள் தூண்டப்பட்டு புத்தூயிர் ஊட்டுவதற்காக நவீன முறையில் தற்போது மசாஜ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மசாஜ் செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
வெளி நோயாளிகள் நடை பயிற்சி மற்றும் சைக்கிளிங் பயிற்சி பெற்று கொள்ளலாம். உள் நோயாளிகளுக்கு நீராவி குளியல் சிகிச்சை அளிக்கப்படும்.
நடை மற்றும் சைக்கிளிங் பயிற்சி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் கால், கை, மூட்டு, தலை போன்ற வலிகளுக்கும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.