உரிமம் இல்லா லிப்டுகள்-கட்டடங்களுக்கு நோட்டீஸ்
சென்னை: உரிய உரிமங்கள் இல்லாமல் கட்டடங்களில் லிப்ட் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக கட்டட உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஆய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இயக்குநரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை நகரில் 1000 லிப்டுகள் முறையான உரிமம் இல்லாமல் இருப்பதாக கண்டுபிடித்துள்ளோம். இவற்றுக்கு முன்பு உரிமம் பெறப்பட்டிருந்தது. ஆனால் அவை காலாவதியாகி விட்டன. அவற்றை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர்.
500 லிப்டுகள் எந்தவித உரிமமும் பெறாமல் பொருத்தப்பட்டுள்ளன. உரிமம் பெறாத லிப்ட்டுகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கை இதுவரை இல்லாத அளவு வேகமாக்கப்பட்டுள்ளது.
கே.கே.நகர், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 கட்டடங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளோம்.
தமிழ்நாடு மின்தூக்கிகள் சட்டம் 1997ன் கீழ் இன்னும் 2 மாதங்களுக்குள் முறையான உரிமங்களைப் பெற வேண்டும் என கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் உரிம் பெற்று 7000 லிப்ட்டுகள் செயல்பாட்டில் உள்ளன. 30 முதல் 40 சதவீதம் வரையிலான லிப்டுகளுக்கு மட்டுமே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மின் தூக்கிகள் சட்டம் 1997ன் கீழ் உரிமம் பெறாமல் லிப்ட் வைத்திருந்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து உரிமம் பெறாமல் பயன்படுத்தி வந்தால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 50 அபராதமாக வசூலிக்கப்படும் என்றார் அவர்.