சென்னை பங்களாவை விற்கும் தொழிலதிபர் சிவசங்கரன் - ரூ. 200 கோடிக்கு விலை போகும்
மும்பை: சென்னையில் உள்ள தனது ஆடம்பர பங்களாவை விற்பனைக்கு விட்டுள்ளார் என்.ஆர்.ஐ தொழிலதிபரான சிவசங்கரன். இந்த பங்களா ரூ. 200 கோடிக்கு விலை போகும் எனத் தெரிகிறது.
வர்த்தக நிறுவனங்களை வாங்குவதும், பின்னர் அதை பெரும் விலைக்கு விற்று விட்டு அடுத்த நிறுவனத்திற்குப் போவதும்தான் சிவசங்கரனின் முக்கியத் தொழில்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை இவர் வாங்கி விட்டதால் பெரும் பிரச்சினை உருவானது. அந்தப் பங்குகளைத் திருப்பித் தர அவர் பெரும் தொகை கேட்டார். இதையடுத்து நாடார் சமூகத்தினர் தனிக் குழு அமைத்து பணம் வசூலித்து சிறிது சிறிதாக மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வங்கியை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
வர்த்தக நிறுவனங்களை வாங்குவதைப் போல ரியல் எஸ்ட்டேடிலும் பெரும் தொகையை முதலீடு செய்வதும் சிவசங்கரனின் இன்னொரு வேலை.
இந்த நிலையில்தான் கடந்த 2006ம் ஆண்டு ரூ. 100 கோடிக்கு வாங்கிய பிரமாண்ட பங்களாவை தற்போது ரூ. 200 கோடிக்கு விற்க முனைந்துள்ளார் சிவசங்கரன்.
சென்னை நகரின் மிக மிக முக்கியமான செனடாப் சாலையில் இந்த பிரமாண்ட பங்களா உள்ளது. 1.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரமாண்ட பங்களா அமைந்துள்ளது. தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு இந்த பங்களா ரூ. 200 கோடிக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டே இந்த பங்களா வி்ற்பனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது விலை அதிகமாக இருந்ததால் யாரும் வாங்க முன்வரவில்லை. தற்போது விலை சற்று குறைந்துளளது. எனவே ரியல் எஸ்டேட் அதிபர்கள் பெருமளவில் இந்த சொத்துக்காக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்களாவை கடந்த 2006ம் ஆண்டு சிவசங்கரன் ரூ. 100 கோடிக்கு வாங்கினார். தற்போது ரியல் எஸ்டேட் சற்று மேம்பட்டு வருவதால் தனது வீட்டை விற்க அவர் முடிவு செய்தார்.
இந்தியாவைப் பொறுத்துவரை தற்போது பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு இணையாக சென்னையிலும் ரியல் எஸ்டேட் தொழில் சீரடைந்து வருகிறது. பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் சொத்துக்களின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால் சென்னையில் அப்படி இல்லாமல் நிலையாக காணப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் அமைந்துள்ள டிஎல்எப் நிறுவனத்திற்குட்பட்ட இந்தூஸ்தான் ஸ்பின்னிங் மற்றும் வீவிங் மில்லின் 66 சதவீத பங்குகளை ரூ. 310 கோடிக்கு வாங்கினார் சிவசங்கரன்.
2007ம் ஆண்டு இந்த மில்லை, மும்பையைச் சேர்ந்த ஆக்ருதி டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டிஎல்எப் வாங்கியது.
அதேபோல மகாராஷ்டிர மாநிலத்தின் பிரபலமான ஆம்பி வேலி திட்டத்திலும் ஒரு முக்கியப் பங்குதாரராக மாறியுள்ளார் சிவசங்கரன். சஹாரா குழுமத்தின் ஒரு நிறுவனம்தான் ஆம்பி வேலி. இந்த நிறுவனம் ஆம்பி வேலி நகரியத்தை உருவாக்கி வருகிறது என்பது நினைவிருக்கலாம்.