கனடா, மியான்மரிலிருந்து 10,000 டன் துவரம் பருப்பு இறக்குமதி - அமைச்சர்
சென்னை: கனடா மற்றும் மியான்மரிலிருந்து 10 டன் துவரம் பருப்பை தமிழக அரசு இறக்குமதி செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெளி மார்க்கெட்டில் கிடைப்பதை விட ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விலைக் குறைவாக இருப்பதால் மக்கள் பெருமளவில் அதை நாடுகின்றனர். இதனால் துவரம் பருப்புக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க துவரம் பருப்பை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தற்போது துவரம் பருப்பு கிலோ ரூ. 32க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே வெளிமார்க்கெட்டில் ரூ. 80க்கு விற்கப்படுகிறது.
2007ம் ஆண்டு ரேஷன் கடைகளஅ மூலம் துவரம் பருப்பை விற்க அரசு முடிவு செய்தது. அப்போது வெளி மார்க்கெட்டில் ஓரளவே விலை அதிகமாக இருந்தாதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பெரிய அளவில் கிராக்கி இல்லை.
ஆனால் தற்போது வெளிமார்க்கெட்டில் துவரம் பருப்பின் விலை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளில் விற்கப்படும் துவரம் பருப்பை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்னர். இவர்களில் 1.75 கோடி பேர் ரேஷன் கடைகளிலேயே மளிகைப் பொருட்களை வாங்குகின்றனர்.
ரேஷன் கடைகளில் விற்கப்படும் துவரம் பருப்பை சிலர் வெளிமார்க்கெட்டுக்கு கள்ளத்தனமாக விற்பதாக புகார்கள் வருகின்றன. இதைத் தடுக்கவும், பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் புகார்களைப் பெறவும் அடுத்த மாதம் ஹெல்ப்லைன் வசதி செய்யப்படவுள்ளது. கிட்டத்தட்ட 400 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகளையும் இதுவரை நடத்தியுள்ளனர் என்றார் வேலு.