அனாதை இல்லத்தில் முன்னாள் காங். எம்எல்ஏ!
திருமங்கலம்: திருமங்கலம் அருகே அனாதை இல்லத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல் சட்டசபை தேர்தலான 1952 தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்தையா (89).
இவர் கடந்த 1960ம் வருடத்தில் புனர்ஜென்மம் உள்பட பல சினிமா படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் உடனிருந்தவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் பணமும், சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவியும் இறந்துவிட்டார். சொத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில் அவருக்கு தற்போது வயதான காலத்தில் ஆதரவு கொடுக்க அவரது மகள் உள்ளிட்டோர் யாரும் முன் வரவில்லை.
இந்த நிலையில் எம்எல்ஏக்களுக்கான உதவி தொகை கேட்டு இவர் பலமுறை தமிழக அரசுக்கு விண்ணப்பித்தார். மேலும் தனது கோரிக்கையை வலியுத்தி அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரை சந்தித்தும் மனு அளித்தும் கூட அவருக்கு உதவி தொகை கிடைக்கவில்லை.
இதனால், விரக்தியின் விளிம்பிற்கு சென்ற அவர் உதவி தொகையே வேண்டாம் என எழுதியும் கொடுத்து விட்டார். இந்நிலையில், இவரது பரிதாபமான நிலை கண்ட ஒருவர் திருமங்கலம் அருகே அழகுசிறையில் உள்ள கிளாரிசன் கருணை இல்லத்தில் கடந்த 2008 அக்டோபர் 29ம் தேதி அன்று இவரை சேர்த்துள்ளார்.
இவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் முதல் அனைத்து உதவிகளையும் கருணை இல்லத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.