ஏமாற்றத்துடன் 100 நாட்களை நிறைவு செய்யும் மன்மோகன் அரசு
இந்த நூறாவது நாளை அரசு சிறப்பாக கொண்டாட முன்பு திட்டமிடப்பட்டிருந்தாலும் கூட பல்வேறு துறைகளில் சொன்ன வாக்குறுதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நிறைவேற்றாத நிலை இருப்பதால் கொண்டாட்டம் கடைசி நேரத்தில் ரத்தாகி விட்டதாக கூறப்படுகிறது.
100 நாள் சாதனை அறிவிப்புகளையும் கூட வெளியிடுவதை மன்மோகன் சிங் அரசு கைவிட்டு விட்டதாம்.
இதற்கு முக்கிய காரணம், மன்மோகன் சிங் பெரிதும் எதிர்பார்த்திருந்த பல்வேறு முக்கிய திட்டங்களை அத்துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நிறைவேற்றாததுதான். இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது மன்மோகன் சிங் பெரும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
இதை வெளிப்படுத்தும் முகமாக இன்று அவர் டெல்லியில் இல்லை. மாறாக, ராஜஸ்தானில் உள்ள பார்மர் நகருக்கு அவர் போகிறார். அங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மன்மோகன் சிங் அரசு ஆட்சிக்கு வந்த புதிதில் அறிவித்த சில திட்டங்கள் குறித்த ஒரு பார்வை -
- சட்டத் துறை
நீதித்துறை சீர்திருத்தங்கள், கோர்ட்டுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது, சட்ட தாமதங்களை தவிர்ப்பது உள்ளிட்ட உறுதிமொழிளை சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்திரு்நதார். ஆனால் இதுவரை இவை எதுவுமே முறையாக நிறைவேற்றப்படவில்லை.
இதை விட முக்கியமாக நீதி விசாரணை தொடர்பான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தபோது அதன் மீது ஒருமித்த கருத்து ஏற்படாததால் அரசு அதைத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல நீதிபதிகள் சொத்து விவரங்களை அறிவிக்கும் மசோதாவையும் மொய்லி லோக்சபாவில் தாக்கல் செய்து அதே வேகத்தில் திரும்பப் பெற்றதால் அரசுக்குப் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது.
- சுகாதாரத் துறை
ஊரக சுகாதாரம், கிராமப்புறங்களில் சிறந்த வசதிகள், கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களுக்கு 100 சதவீத ஊதிய உயர்வு என பல திட்டங்களை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்.
ஆனால் பன்றிக் காய்ச்சல் ரூபத்தில் அவர் மீதும் அரசு மீதும் ஏகப்பட்ட அதிருப்திகள், கண்டனங்கள். பன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கல் பலத்த சர்ச்சையை எழுப்பின.
குலாம் நபி ஆசாத்தின் செயல்பாடும் அனைத்துத் தரப்பினரின் அதிருப்திகளையும் பெற்றுள்ளது. மேலும், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் ஆசாத் மீது கடும் அதிருப்தியுடன் உள்ளனராம்.
- மனித வளத்துறை
மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் மீதும் பிரதமர் கடும் அதிருப்தியுடன் உள்ளார். பத்தாவது வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிபிஎஸ்இ தேர்வுகளில் கிரேடிங் முறையைக் கொண்டு வர வேண்டும் என சிபல் தடாலடியாக கூறியது பெரும் கண்டனங்களை சம்பாதித்துத் தந்தது. இதனால் தனது கருத்திலிருந்து பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் சிபல்.
கடந்த 100 நாட்களில் கபில் சிபல் செய்துள்ள ஒரே சாதனை, கட்டாயக் கல்வி சட்ட மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றியது மட்டுமே.
இப்படி அனைத்து முக்கியத் துறைகளிலும் சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதால் பிரதமர் மன்மோகன் சிங் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
100 நாள் திட்டம் என்று மிகப் பிரமாண்டமாக ஒவ்வொரு துறையும் அறிவித்து அது தொடர்பான கையேடுகளையும் வெளியிட்டு பிரமாதப்படுத்தின. ஆனால் தற்போது சொன்னபடி யாரும் எதுவும் செய்யாததால் பிரதமர் மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கூட அதிருப்தியுடன் உள்ளாராம்.