புது சட்டசபையில் 2010ம் ஆண்டு தமிழக பட்ஜெட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு கட்டி வரும் புதிய சட்டசபை வளாகத்தில், அடுத்த ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை நடந்தது.

சென்னை அண்ணா சாலையையொட்டி உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழக தலைமை செயலகம் மற்றும் சட்டசபையை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அரசு அதிகாரிகள் மனது வைத்தால் 2011-ம் ஆண்டு பட்ஜெட்டை புதிய சட்டசபையில் தாக்கல் செய்வோம் என்று சட்டசபையில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து புதிய சட்டசபையை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியது. டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டு, கட்டடப் பணிகள் மின்னல் வேகத்தில் தொடங்கின.

முதல்வர் கருணாநிதி தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பல்வேறு அறிவுரைகளையும், யோசனைகளையும் தெரிவித்து வருகிறார்.

தற்போது கட்டுமானப் பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன. இன்னும் 4 மாதங்களுக்குள் பணிகள் முடிய வாய்ப்புள்ளது.

புதிய தலைமை செயலகம் அமைக்கும் பணி பற்றி, கோட்டையில் நேற்று மாலை அனைத்துத் தரப்பு அதிகாரிகளையும் அழைத்து முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது சாலை விரிவாக்கப்பணி, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அதன் கட்டுமான பணிகளை தொடங்கி முடிப்பது பற்றிய கருத்துகளை முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்டறிந்தார். மேலும் புதிய தலைமை செயலகம் அமைய உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தை சுற்றியுள்ள சாலைகள், பாலங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதைப் பற்றியும் அவர் ஆலோசித்தார்.

குறிப்பாக சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை ஆகியவை விரிவாக்கம் செய்யப்படுகின்றன. முடிந்தால் சில சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மன்றோ சிலை அமைந்துள்ள சாலை முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக தனியார் நிலத்தை எடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

இதுதவிர புதிய தலைமை செயலகத்துக்கு அலுவலர்கள் எளிதாக வருவதற்காக அதையொட்டி புதிய பறக்கும் ரயில் நிலையத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

தலைமை செயலகம் கட்டுவதற்காக இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், அதற்காக தரப்பட வேண்டிய மாற்று இடங்கள் பற்றியும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

முக்கியமாக பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடு குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலவே புதிய சட்டசபைக்கும், தலைமைச் செயலகத்துக்கும் பாதுகாப்பு தரப்பட உள்ளது.

சட்டசபை, தலைமை செயலகத்துக்கு ஏராளமான வாகனங்கள் வரும் என்பதால் அவற்றை நிறுத்துவதற்கான இடவசதி பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

புதிய சட்டசபை விரைவில் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் 2010-ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை, புதிய சட்டசபையில் தாக்கல் செய்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில், தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை முதன்மை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர் தேவ.ஜோதி ஜெகராஜன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் சந்தானம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சட்டத்துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+