கல்வி கடனுக்கு வரம்பு இல்லை - மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
காரைக்குடி: மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடனுக்கு வரம்பு ஏதும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுத்துள்ள அறிக்கை:
கல்வி கடன் வழங்குவதில் ஒரு சில வங்கிகள் தேவையற்ற வரம்புகளை வகுத்து செயல்படுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது.
ஒவ்வொரு வங்கிக்கும் சேவை பகுதிகள் (சர்வீஸ் ஏரியா) பிரிக்கப்பட்டுள்ளது. அதையே காரணம் காட்டி சில வங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரித்திருப்பதாக புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வங்கிகள் சங்கத்தை தொடர்பு கொண்ட போது, கல்வி கடனுக்கு எந்த வரம்பும் விதிக்கவில்லை. விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தான் பரிந்துரை செய்யப்படும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதை சிவகங்கை, காரைக்குடி, நடக்கும் கல்வி கடன் மேளாவில் விபரமாக தெரிவிக்க உள்ளேன். கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்கள், வங்கிகள் இந்த விபரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.