முத்தூட் கொலை-நடிகையை காப்பாற்றியவர் கைது
நாகர்கோவில்: கேரளாவில் முத்தூட் நிறுவன அதிபர் மகன் பால் எம்.ஜார்ஜ் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியின் கூட்டாளியான கண்ணன் நாகர்கோவிலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் ஜார்ஜ் கேரளாவில் ஒரு மர்ம கும்பலால் கொல்லப்பட்டார். ஜார்ஜுடன் காரில் இருந்த அவரது நண்பர் மனு என்பவரையும் கொலை கும்பல் கத்தியால் குத்தியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலை நடந்த சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வேறு ஒரு காரில் வந்த ஜார்ஜின் டிரைவர் ஷிபு, பால் ஜார்ஜையும், மனுவையும் தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக போலீசில் கூறினார்.
ஷிபு மருத்துவமனைக்கு சென்றபோது அவரது காரை ரவுடி ஓம்பிரகாஷ் சிறிது தூரம் தொடர்ந்து வந்ததாகவும், சிறிது நேரத்தில் அந்த கார் வேறு திசையில் வேகமாக சென்று விட்டதாகவும், ஷிபு போலீசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதையடுத்து அந்த காரை போலீசார் ஷவரா என்ற இடத்தில் கைப்பற்றினர். அப்போது அந்த வண்டியில் ரூ.40 லட்சம் பணம் இருந்ததும், நடிகை ஒருவரின் கைப்பை, ஆடைகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் போலீசார் இதனை மறுத்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக போலீசார் ஒரு சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜார்ஜ் பயணம் செய்த காரில் இருந்த பொருட்கள் அனைத்தையும் திருவனந்தபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் எடுத்து சென்றது தெரியவந்தது. இவர் ரவுடி ஓம்பிரகாஷின் கூட்டாளியாவார். ஜார்ஜுடன் காரில் பயணித்ததாக கூறப்படும் நடிகை தப்பி செல்ல பெரிதும் உதவியவர் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கண்ணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவரை தனிப்படை போலீசார் நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர்.