சென்னை மற்றும் தென் மாநிலங்களில் பெரும் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டம்
டெல்லி: சென்னை மற்றும் தென் மாநிலங்களில் பெருமளவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி பெரும் நாசத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
காஷ்மீர் மற்றும் டெல்லியில் பிடிபட்ட தீவிரவாதிகள் மூலம் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுவரை வட இந்தியாவைக் குறி வைத்து வந்த தீவிரவாதிகள் தற்போது தென்னிந்தியாவில் பெருமளவில் நாச வேலைகளை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தளம் அமைத்து உதவி குழுக்களை உருவாக்கி வைத்துள்ளனர்.
அதே மாதிரியான ரகசிய தளங்களை தென் இந்திய நகரங்களிலும் அமைக்க தீவிரவாதிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கான தளங்களை அமைக்கும் பணியில் லஷ்கர்-இதொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக சமீபத்தில் மத்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.
தென் இந்தியாவில் ஆட்களைப் பிடித்து ரகசிய தளம் அமைக்கும் வேலைகளை சீக்கிரம் முடிக்குமாறு தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. உத்தரவிட்டுள்ளதாம். அதன் பேரில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் ரகசிய குழுக்கள் தென் இந்தியாவுக்குள் ஊடுருவியபடி உள்ளனவாம்.
இந்த பணி முடிந்ததும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் நகரங்களில் தொடர் குண்டு வெடிப்பில் தீவிரவாதிகள் ஈடுபட முயற்சி செய்வார்கள் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லைப்புற மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் பிடிபட்டனர். எதற்காக காஷ்மீர் வந்து இருக்கிறீர்கள் என்று போலீசாரும், ராணுவத்தினரும் பல தடவை கேட்டும் அவர்களிடம் இருந்து திருப்தியான பதிலை பெற முடியவில்லை.
கடந்த சில தினங்களாக தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை காஷ்மீரில் அதிகரித்துள்ளது. இவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி வலையில் விழுந்துள்ள உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அணி, அணியாக வரும் அவர்களை உளவுத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
தென் மாநிலங்களில் தங்களுக்கு நம்பிக்கையான ஆதரவாளர்கள் கிடைத்து விட்டதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் நாசவேலைக்கு முயற்சி செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தென் மாநில போலீசாரை மத்திய உள்துறை உஷார்படுத்தியுள்ளது.
இதற்கேற்ப தென் மாநில காவல்துறை முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications