ஜம்மு காஷ்மீர் சட்டசபை அருகில் தாக்குதல்-2 ராணுவத்தினர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை அருகே இன்று தீவிரவாதிகள் கையெறி குண்டு மற்றும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், 8 பேர் படுகாயமைடைந்தனர்.
ஸ்ரீநகரில் உள்ள லால் செளவுக் பகுதியில் இருந்து பட்மலு பகுதிக்கு செல்லும் வழியில் மாநில சட்டசபை உள்ளது. இதற்கு அருகில் தான் தலைமை செயலகம், காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 28வது பட்டாலியனை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இந்த தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு தீவிரவாத கும்பல் ஜம்மு காஷ்மீர் தீயணைப்பு பிரிவின் தலைமையகத்துக்கு முன்னாள் ரோந்து போய் கொண்டிருந்த சிஆர்பிஎப் படையினர் மீது குண்டு வீச்சு, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
இது இம்மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது துயர சம்பவம். இம்மாதம் 1ம் தேதி தீவிரவாதிகள் சிஆர்பிஎப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.