கருணாநிதியை சந்தித்தார் இல.கணேசன்- கைதிகளை விடுவிக்க கோரிக்கை
சென்னை: முதல்வர் கருணாநிதியை இன்று காலை பாஜக தலைவர் இல.கணேசன் சந்தித்தார். அப்போது அண்ணா நூற்றாண்டையொட்டி 7 வருட சிறைக் காலத்தை முடித்த நன்னடத்தைக் கைதிகளை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கை:
குற்றம் புரிந்தவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டறிவதிலும் சில நேரங்களல் தவறுகள் நேர்கின்றன.
சில நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை யின் காரணமாக உணர்ச்சி வயப்பட்டு தண்டனைக்குரிய குற்றத்தை செய்து விடுபவர்களும் உண்டு. அவர்கள் எந்த "கிரிமினல்' பின்னணியும் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் சிறையில் தங்களது தவற்றை உணர்ந்து ஒருவித வாழ்க்கை வாழுகின்றனர்.
தண்டனை என்பது ஒருவரது தவற்றை உணர்ந்து திருந்துவதுதான் என்றால், அதற்கு 14 ஆண்டு காலம் தேவையில்லை. சிலர் குறுகிய காலத்திலேயே மனம் மாறி விடுகின்றனர்.
அத்தகையவர்களுக்கு நிச்சயமாக கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவின் துவக்கத்தையொட்டி தமிழக அரசு அறிவித்த சலுகை ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. அந்த முடிவை அன்றே பாஜக வரவேற்றது.
அண்ணா நூற்றாண்டு விழவினையொட்டி பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ள தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நிறைவுறும் நாளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து, அதற்கு முன்பு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாத, சிறை வாழ்க்கையிலும் நன்னடத்தையுடன் வாழ்கின்ற சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரை வேண்டுகிறேன்.
இந்த கோரிக்கைகளை வற்புறுத்துவதற்காகவே இன்று காலை தமிழக முதல்வரை நேரில் சந்தித்தேன். என்னுடன் மாநில துணைத் தலைவர் ஜி.குமாரவேலு, மாநில பொதுச் செயலாளர் எஸ்.மோகன் ராஜுலு மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சென்னை மாநகரத் தலைவர் துரைசங்கர் ஆகியோரும் உடனிருந்தனர் என்று கணேசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications