தருமபுரி மருத்துவக் கல்லூரி-திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவக் கவுன்சிலின் அனுமதியைப் பெற திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை என முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பாமக உள்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தருமபுரி மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. விதிமுறைகளைத் தளர்த்தி மாவட்டத்தின் பயன்பாட்டுக்காக மருத்துவக் கல்லூரிக்கு முதலாம் ஆண்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு அங்கீகாரம் பெற திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை.
இனி நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற விஞ்ஞான முறை தேர்தல் திட்டத்தை பாமக உருவாக்கி வருகிறது.
பாமகவில் அதிக அளவு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். கட்சியில் கிளைச் செயலருக்கு அதிக அதிகாரம் வழங்கும் திட்டம் உருவாக்கப்படும் என்றார்.