10 நாள் லண்டன் பயணத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்து நாள் பயணமாக இன்று காலை லண்டன் கிளம்பினார்.
அங்கு அவர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் 9ம் தேதிதான் ஸ்டாலின் தமிழகம் திரும்புவார்.
முன்னதாக அமெரிக்கா செல்லவிருந்தார் ஸ்டாலின். அமெரிக்க பயணத்துடன் சேர்த்து லண்டன் சென்று தனது உடல் நிலை குறித்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சட்டசபை இடைத் தேர்தல் இடையில் வந்து விட்டதால் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ரத்தாகி விட்டது.
இந்த நிலையில், தற்போது லண்டன் பயணத்தை மட்டும் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொளளவுள்ளார்.
இன்று காலை 5.25 மணிக்கு சென்னையிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் கிளம்பினார் ஸ்டாலின். அவருடன் மனைவி துர்கா உள்ளிட்ட நான்கு பேர் உடன் சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் சொந்த பயணமாக லண்டன் செல்கிறேன் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.