மூளைச் சாவு - ராசிபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் சென்னையில் தானம்
சேலம்: ராசிபுரம் அருகே விபத்தில் மூளைச்சாவை சந்தித்த ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்துக்கு அருகே பிள்ளாநல்லூர் வேட்டல்காடு பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜா (35). இவருக்கு நதியா என்ற மனைவியும் சுபிக்சன் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி யுவராஜா ஆண்டகளூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது அவர் மீது படுவேகமாக வந்த வாகனம் ஒன்று மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அரியனூர் விநாயகா மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவர் மூளைச்சாவை சந்தித்தார்.
இதையடுத்து டாக்டர்கள் யுவராஜாவின் குடும்பத்தினரிடம் மூளைச் சாவு மற்றும் உடல்தானம் குறித்து எடுத்து கூறினர். அவர்கள் யுவராஜாவின் உடலை தானம் வழங்க முன் வந்தனர்.
அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் அவரது உடல் உறுப்புகள் பிரித்து எடுக்கப்பட்டு உரியவர்களுக்குப் பொருத்தப்படும்.