'ராஜவைத்தியர்' விஜயக்குமார் மீது மேலும் 4 வழக்கு
சென்னை: நோயாளிகளிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள திருவிதாங்கூர் ராஜவைத்தியர் டாக்டர் விஜயக்குமாரின் மீது ஆயுத தடுப்பு சட்டம், சொத்து குவிப்பு உள்ளிட்ட மேலும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூரில் திருவிதாங்கூர் ராஜ வைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவமனை வைத்துள்ள டாக்டர் விஜயக்குமார்.
இவர் நோயாளிகளிடம் மான் கறி கொடுத்து குணப்படுத்துவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக புகார் வந்தது. இதையடுத்து அவர் கடந்த ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 60க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். ரூ. 3 கோடி வரை பண மோசடி செய்துள்ள அவர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் மீதான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மேலும் அவர் தி.நகரில் 3 நட்சத்திர ஹோட்டல், மதுரையில் வீடு, பழத்தோட்டம் ஆகியவைகளை வாங்கி வைத்துள்ளார். இதை முடக்குவது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் இருந்த அவரை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது, போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது.
மதுரையில் மான் வேட்டை...
அவர் பெங்களூர் நோயாளி ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது, மதுரையில் மான் வேட்டையாடியது போன்றவை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் சொத்து குவிப்பு, ஆயுத தடுப்பு சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், விதிகளை மீறி டிவிக்களில் விளம்பரம் செய்தது ஆகிய நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.