எம்.எல்.ஏக்களுக்கான சம்பள உயர்வை எதிர்த்து மனு தள்ளுபடி
சென்னை: சட்டசபை உறுப்பினர்களின் சம்பள உயர்வு, சட்டசபையின் உரிமை. அதில் கோர்ட் தலையிட முடியாது என்று கூறி அதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு அளித்ததை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில்,
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளத்தை உயர்த்தவும், பென்சனை அதிகரிக்கவும், இலவச வீட்டுமனை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் சம்பளம் ரூ.50 ஆயிரமாக உயருகிறது.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ஒன்றரை கிரவுண்டு நிலம் சென்னை அருகே வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதற்காக சட்டமன்ற உறுப்பினராக ஆகிறார்கள். இவர்களுக்கு முன்பு சம்பளம் வழங்குவதில்லை. கவுரவ அடிப்படையில் போக்குவரத்து, தங்கும் இடவாடகை சேர்த்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டது.
ஆனால் இப்போது எம்.எல்.ஏ. பதவி என்பது ஆடம்பர பதவியாகி விட்டது. குளிர்சாதனம், டி.வி., தொலைபேசி போன்ற நவீன வசதிகொண்ட ஆடம்பரமான தங்கும் இடம் இவர்களுக்கு சென்னை அரசினர் தோட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்த ஊரில் வீடு, நிலங்கள் உள்ளன. அப்படியிருக்க இவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்ய வந்த இவர்களுக்கு, சம்பளத்தை உயர்த்தவும், பென்சனை உயர்த்தவும் கூடாது. ஆகவே இதற்காக முன்தேதியிட்டு அமல்படுத்தும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில்,
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தேவை என்பதை சட்டசபைதான் பரிசீலித்து முடிவு எடுக்க முடியும். சட்டசபை எடுத்த முடிவில் கோர்ட் தலையிட முடியாது.
சம்பள உயர்வு செய்தது நியாயமாக உள்ளது. வீட்டுமனை வழங்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை என்று இக் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் செலவினங்களை மனதில் வைத்துதான் பென்சன் மற்றும் அலவன்சுகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.