காதலுக்கு எதிர்ப்பு- வீட்டில் அடைக்கப்பட்ட பெண் என்ஜீனியர் மீட்பு
தென்காசி: தென்காசி அருகே காதலரிடமிருந்து பிரிக்கப்பட்டு, உறவினர் வீட்டில் கடந்த 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியரை போலீஸார் மீட்டுள்ளனர்.
நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து எஸ்பி ஆஸ்ரா கர்க் மனு பெற்றார். அப்போது ஒரு இளம்பெண் எஸ்பியிடம் மனு கொடுத்தார்.
அதில், காதல் பிரச்சனையால் தனது தோழி இலஞ்சியிலுள்ள அவரது தாய் மாமா வீட்டில் 2 மாதங்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்படுவதாகவும் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் முறையிட்டார்.
இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தென்காசி டிஎஸ்பி சீனிவாசனுக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் அவர் போலீசாருடன் இலஞ்சியில் உள்ள குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள ஒரு அறையில் போலீசார் சோதனை போட்டபோது ஒரு இளம்பெண் பிளேடால் தன் கையை கீறிக் கொண்டு கதறியபடி வெளியேறி மயங்கி விழுந்தார். போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தனர்.
பின்னர் மயக்கம் தெளித்ததும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
அதன் விபரம் வருமாறு..
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா. டாக்டரான இவர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் சித்ரா. சென்னையில் எம்சிஏ படித்து விட்டு ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அங்கு பணியாற்றி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நஷீர் என்பவருடன் காதல் ஏற்பட்டது. வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது காதலுக்கும் இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இருவரும் பழக்கத்தை தொடர்ந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா இதுகுறித்து இலஞ்சியை சேர்ந்த சித்ராவின் தாய் மாமா மாணிக்கத்திடம் தெரிவித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் அவர் சென்னை சென்றார்.
சித்ராவை சந்தித்து தந்தையின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி அவரை ஏமாற்றி இலஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்குள்ள ஒரு அறையில் சித்ராவை அடைத்து வைத்து காதலித்த நஷிரை மறக்குமாறு கூறி சித்ரவதை செய்தார்.
இதற்கு உடந்தையாக சுப்பையாவும் செயல்பட்டார். மேலும் சித்ரா தப்பி செல்லாதவாறு காவலுக்கு ஆட்களையும் போட்டார்.
இந்த நிலையில் சித்ராவைப் பார்க்க அவரது தோழி வந்தார். அவரிடம் சித்ரா ஒரு புகார் மனுவை கொடுத்து எஸ்பி ஆஸ்ரா கார்கிடம் ஓப்படைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி எஸ்பியிடம் மனு கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications