நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் கலெக்டர்
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து திண்டுக்கல் கலெக்டர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவிட்டது.
சென்னையை சேர்ந்த சவுத் இந்தியா ரோடு மில்க் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வைத்தியநாதன் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் கூறியுள்ளதாவது
திண்டுக்கல் ஆவினில் பால் சப்ளை செய்ய டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இந்த டெண்டர் இருகட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், 2008 டிசம்பர் 12 ல் நடந்த டெக்னிக்கல் டெண்டரில் எனது நிறுவனம், தீபிகா டிரான்ஸ்போர்ட் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டோம். பிறகு வர்த்தக டெண்டர் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அது நடக்கவில்லை. இந்த நிலையில் மறுடெண்டர் நடத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்தது.
இதை ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்யப்பட்டது. நீதிமன்றமும் 2008 நவம்பர் 20 ல் வெளியான அறிவிப்பின்படி டெண்டர் நடத்த உத்தரவிட்டது.
மேலும், டெண்டர் கமிட்டியும் எனது நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கும்படி சிபாரிசு செய்தது. அத்துடன், ஆவின் பொது மேலாளர், உதவி பொது மேலாளர் சிபாரிசு செய்தும் கலெக்டர், பால் உற்பத்தி கமிஷனர் டெண்டர் ஒதுக்கவில்லை.
இது கோர்ட் உத்தரவை மீறுவதாகும். கலெக்டர் மற்றும் பால் உற்பத்தி கமிஷனர் மீது கோர்ட் அவமதிப்பு செய்ததாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இதுகுறித்து பதிலளிக்கும்படி மாவட்ட கலெக்டர், பால் உற்பத்தி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications