13வது நாளாக மீனவர்கள் ஸ்டிரைக் - நாளை ரயில் மறியல்
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் ரூ. 5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும், கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், மீனவர்கள் தாக்கும் இலங்கை கப்பற்படை மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21ம் தேதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பித்தனர்.
இதில் ராமநாதபுரதம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இவர்களது போராட்டம் இன்று 13வது நாளாக தொடருகிறது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்பகுதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மீன் பிடி தொழிலை மறைமுகமாக நம்பியிருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் குடும்பங்களும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் சுமார் ரூ. 5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தி்ல் ஐந்து மாவட்ட மீனவர்கள் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் நாளை மாலை ரயில் மறியல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நாளை மாலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதென மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications