களக்காடு மலையில் கடும் தீ - 500 ஏக்கர் நாசம்!
திருநெல்வேலி: களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் சுமார் 500 ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமானது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
இதன் அருகில் உள்ள அகலிகை மொட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீ பற்றியது. தகவல் அறிந்த 50 -க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் போராட்டினர். ஆனால் கொழுந்து விட்டு எரியும் தீயை முற்றிலுமாக அணைக்க முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று மதியம் மாவடி பொய்கை மலை பகுதிக்கும் காட்டுத் தீ பரவியது. அங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் மண், கற்களை அள்ளிப் போட்டும், மரக்கிளைகளை வைத்து அடித்தும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அவைகளை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த தீ விபத்து காரணமாக இது வரை அந்த பகுதியில் சுமார் 500 ஏக்கர் வனப்பகுதி கருகியுள்ளதாக வனத்தறை வட்டாரங்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.