ரயில் மறியில்-வீரமணி உட்பட 550 பேர் கைது
சென்னை: இலங்கையில் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற கோரி இன்று தடையை மீறி ரயில் மறியல் செய்ய முயன்ற திராவிட கழகத்தினர் சுமார் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி இன்று ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சுமார் 550க்கும் மேற்பட்ட திராவிட கழக தொண்டர்கள் பெரியார் திடலில் ரயில் மறியலுக்கு திரண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அதற்கு முன்னதாக திராவிட கழக தலைவர் வீரமணி தொண்டர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதியுடன் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்த விஷயத்தில் அவருடன் யாரும் பகைமை பாராட்ட வேண்டாம். அவர் இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர்.
ராஜபக்சே பதவிக்கு வந்த போது தான் தமிழர்களுக்கு எதிரி அல்ல என கூறினார். ஆனால், தற்போது தமிழர்களை வாழ முடியாமல் அவர் செய்துவிட்டார்.
அங்கு மனித உரிமை மீறப்படுவதாக அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா இன்னும் அமைதியாகவே இருக்கிறது.
வன்னி பகுதிகளில் வன் கொடுமை முகாம்களில் இருக்கும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகிறோம்.
இந்த கோரிக்கை நிறைவேறாவிட்டால் முதல்வர் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications