குஜராத்தில் கர்ப்பிணி பலி- இதுவரை 108 பேர் மரணம்
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 7 மாத கர்ப்பிணி ஒருவர் பலியாகியுள்ளார். நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் பாவ்யா தாவே என்ற 23 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த மாதம் 29ம் தேதி எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் கடும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளித்து வந்தனர.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு மரணமடைந்தார். இதையடுத்து குஜராத்தில் இந்த கொடூர நோய்க்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை குஜராத்தில் சுமார் 118 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 94 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்தியாவில் 108 பேர் பலி...
தற்போது இந்த நோய் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 68 ஆயிரத்து 609 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மேலும் 40 ஆயிரம் பேருக்கு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்களின் எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பிரேசிலில் 657, அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 108 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications