இடைக்கால முதல்வராக ரோசய்யா பதவியேற்பு
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து இடைக்கால முதல்வராக நிதியமைச்சர் கே.ரோசய்யா பதவியேற்றுக் கொண்டார்.
ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து இடைக்கால முதல்வராக நிதியமைச்சர் ரோசய்யாவை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
ரோசய்யா மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்தவர். ஆந்திர மாநிலத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தவர்.
இடைக்கால முதல்வராக அறிவிக்கப்பட்ட ரோசய்யா இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் என்.டி.திவாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அடுத்த முதல்வர் யார்...?
இதற்கிடையே, ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜசேகர ரெட்டியின் நிர்வாகத்தில் அவரைத் தவிர வேறு யாரும் தெளிவான தலைவர்களாக அடையாளம் காணப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் ராஜசேகர ரெட்டியே முன்னின்று எடுப்பார். அவருக்கு அடுத்து இவர்தான் என்று யாரையும் தெளிவாக சொல்ல முடியாத நிலை.
இதனால் ரெட்டிக்கு அடுத்து முதல்வராக யாரைப் போடுவது என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
திறமை வாய்ந்த ஒரு தலைவரையே முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், காங்கிரஸ் கட்சி விரைவில் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும்.
தற்போதைய நிலையில் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் ஜெயபால் ரெட்டி, புரந்தேஸ்வரி ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன. அதேசமயம், தனது வாரிசாக ராஜசேகர ரெட்டியால் அடையாளம் காட்டப்பட்ட அவரது மகன் ஜெகன் ரெட்டிக்கு முதல்வர் பதவி தரப்படுமா என்பது கேள்விக்குறிதான்.












Click it and Unblock the Notifications