ரெட்டி மறைவு - கருணாநிதி, ஜெ. அஞ்சலி
சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு நாளை ஒரு நாள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காணாமல் போன முதல்வர் ராஜசேகர ரெட்டி மீண்டும் திரும்பி வருவார் என்ற ஆறுதல் செய்தியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவரது மரணச் செய்தி வந்து வேதனைப்படுத்தியுள்ளது.
மிகச் சிறந்த மருத்துவராக, மக்களுக்குப் பணியாற்றிய ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து முதல்வர் பதவி வரை உயர்ந்தவர்.
ரெட்டியின் மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஆந்திர மக்களுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும், ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் கருணாநிதி.
ஜெ. அஞ்சலி
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ராஜசேகர ரெட்டி மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், மற்றும் அதே விபத்தில் பலியான மற்ற நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரெட்டிக்கு கரூரில் அஞ்சலி
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜகேகர ரெட்டி மறைவையொட்டி, அகில இந்திய கைவிஞர் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராஜகேகர் ரெட்டி மரணம் ஆந்திராவை தாண்டி தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கரூரில் அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் விசு.சிவக்குமார் தலைமையில் அக் கட்சி அலுவலகத்தில் ரெட்டி படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரெட்டி மறைவு குறித்து அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் விசு.சிவக்குமார் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசியல் அரங்கில் தனி மரியாதைடன் விளங்கியவர் ராஜசேகர ரெட்டி. அவரது தனி மனித ஒழுக்கம், நற்பண்புகள், ஏழைகளுக்கு உதவுதல், மனிதாபிமானம், போன்றவற்றி அவருக்கு நிகர் அவர் தான். அவரது இந்த நற்பண்புகள் தான் அவரை நல்ல அரசியல்வாதி என மக்கள் மனதில் பதிய வைத்தது.
முதல்வர் ராஜசேகர ரெட்டியின் இழப்பு ஆந்திர மக்களுக்கு பெரும் இழப்பு. ஆந்திராவின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கலாக இருக்கும் என்றார்.
புதுச்சேரியிலும் அரசு விடுமுறை...
இதேபோல ராஜசேகர ரெட்டிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி அரசும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கவுள்ளது. இதற்காக நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வீராசாமி- கனிமொழி அஞ்சலி செலுத்துகின்றனர்
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பாக ராஜசேகர ரெட்டி க்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியும் ஹைதராபாத் செல்கின்றனர்.
இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.