ராஜசேகர ரெட்டி மரணம் - தமிழகத்துக்கு நிஜமான இழப்பு
சென்னை: பாலாற்றுப் பிரச்சினையில் டாக்டர் ராஜசேகர ரெட்டியுடன் பேசி சுமுக நிலையை ஏற்படுத்தும் திட்டத்திலிருந்த முதல்வர் கருணாநிதிக்கு, ரெட்டியின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாயும் ஒரே ஆறு பாலாறு. ஆனால் கர்நாடகாவின் 'புண்ணிய'த்தில் அந்த ஆற்றில் நீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. மழைக்காலங்களில் மட்டும் ஓரளவு வெள்ளம் வரும்.
அதையும் தடுப்பது போல ஒரு அணையைக் கட்ட முடிவு செய்திருந்தது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம். பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜசேகர ரெட்டியும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். இது குறித்து தமிழகத்தின் முறையீடுகளை அவரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தடுப்பணைகளைக் கட்டும் ஆரம்பப் பணியில் இறங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராஜசேகர ரெட்டி சம்மதித்திருந்தார். மேலும் அந்த விழாவின் போது பாலாற்றுப் பிரச்சினை குறித்து இரு மாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் முடிவை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். இதனை முதல்வர் கருணாநிதியும் உறுதிப்படுத்தினார்.
தமிழக தரப்பு நியாயங்களைக் கேட்ட பிறகு, நிச்சயம் நாம் சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தாராம் ரெட்டி.
இந்த நிலையில்தான் இப்படியொரு சோகம் நடந்துவிட்டது.
"நதி நீர் பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளும் மனப்பான்மை கொண்டவர் ரெட்டி. இரு மாநில மக்களுக்கும் ஏற்ற நல்ல முடிவை அவர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
முதல்வர் கருணாநிதியே தனிப்பட்ட முறையில் இதுகுறித்து ராஜசேகர ரெட்டியிடமும் பேசியிருந்தார். ஆனால் இப்படியாகி விட்டதே...", என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .