ஹெலிகாப்டர் விபத்து - விசாரணைக் குழுவை அமைத்தது மத்திய அரசு
டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.தியாகி இந்த விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்குவார். இக்குழுவில், தியாகி உள்பட நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு 2 மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
இதற்கிடையே, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (டிஜிசிஏ) தனியாக ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து டிஜிசிஏ தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
மற்றபடி ஹெலிகாப்டரில் கோளாறு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. நெருக்கடி நேரத்தில் தரப்படும் சிக்னல்களும் அனுப்பப்படவில்லை. மோசமான வானிலையிலும் கூட பறக்கக் கூடிய தகுதியுடன்தான் ஹெலிகாப்டர் இருந்தது.
இருப்பினும் விசாரணைக்குப் பின்னரே விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரிய வரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பெல் 430 ரக ஹெலிகாப்டர்கள் பறக்கும் தகுதியுடன்தான் உள்ளன. ரெட்டி பயன்படுத்திய விமானம் 2010ம் ஆண்டு வரை பறப்பதற்கான உரிமத்தை வைத்திருந்தது.
விபத்தில் உயிரிழந்த இரு பைலட்டுகளும் அனுபவம் வாய்ந்தவர்கள். திறமையானவர்கள் என்றார் படேல்.












Click it and Unblock the Notifications