திமுக பிரமுகருக்கு அடி - போலீஸைக் கண்டித்து ஆர்பாட்டம்
சுரண்டை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே திமுக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து 6ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது.
கீழப்பாவூர் ஓன்றியம் அரியப்பபுரம் ஊராட்சி எல்லப்புளியை சேர்ந்தவர் துரை. திமுக கிளை செயலாளராக உள்ளார். இவர் தொழில் செய்தவற்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெறுவதற்கு அதன் தலைவியை நாடியுள்ளார். இதற்கு ரூ.30 ஆயிரம் கமிஷன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு தலைவி துரைக்கு கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக துரை பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்காததால் ஆலங்குளம் டிஎஸ்பியிடம் மனு கொடுத்தார்.
அதன்மீது விசாரணை நடத்தும்படி டிஎஸ்பி பாவூர்சத்திரம் போலீசுக்கு பரிந்துரை செய்தார். இது போலீசாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே திமுக பிரமுகர் துரையை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார்.
திமுக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு வரும் 6ம் தேதி (ஞாயிறு காலை) 10 மணிக்கு கீழப்பாவூர் ஓன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.