தோஹா பேச்சு - முட்டுக்கட்டை விலகியது... அடுத்தவாரம் மீண்டும் பேசுகிறார்கள்!
டெல்லி: தற்போதைய பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு, உலக வர்த்தக அமைப்பின் தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுகளில் நிலவிவந்த முட்டுக்கட்டை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் 14-ம் தேதி ஜெனீவாவில் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை முடிந்தது.
'தோஹா சுற்றுக்கு புத்துயிர் ஊட்டுவது, வளர்ச்சிக்கான உறுதிப்பாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமை வகித்தார்.
முதல் நாள் கூட்டத்தில் உலக வர்த்தக அமைப்பின் பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும், சில உறுப்பு நாடுகளும் தமது அறிக்கைகளை சமர்ப்பித்தன.
ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் தமது அறிக்கைகளை சமர்ப்பித்தன.
வளரும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தையும் சந்தையையும் ஐரோப்பிய நாடுகளுக்கு திறந்துவிட வேண்டும் என்ற கருத்தில் நிலவி வந்த முட்டுக்கட்டையை நீக்கி, மீண்டும் ஜெனீவாவில் பேச்சுக்களைத் தொடங்க ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.