வைர பஸ்பம் தந்து ரூ. 20 லட்சம் மோசடி-ராஜவைத்தியர் மீது புது புகார்
சென்னை: மூளை வளர்ச்சி குன்றிய சிறுவனை வைர பஸ்பம் கொடுத்து குணப்படுத்துவதாக கூறி கோயம்புத்தூர் நகை வியாபாரியின் மனைவியிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக ராஜவைத்தியர் விஜயகுமார் மீது மேலும் ஒரு புகார் சுமத்தப்பட்டுள்ளது.
சென்னையில் திருவிதாங்கூர் ராஜவைத்திய சாலை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி, நோயாளிகளுக்கு மான்கறி, தங்க பஸ்பம் கொடுத்து குணப்படுத்துவதாக கூறி ஏமாற்றிய டாக்டர் விஜயகுமார் (60) என்பவரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணி வரும் அவர் மீது 60 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த நகை வியாபாரி ஒருவரின் மனைவி ஹேமாமாலினி என்பவர் புது புகார் கொடுத்துள்ளார். அதில்,
எனது மகன் மூளை வளர்ச்சி குறைபாடினால் அவதிப்பட்டு வருகிறான். இதையடுத்து நாங்கள் டாக்டர் விஜயகுமாரை சென்று சந்தித்தோம். அப்போது அவர் வைர பஸ்பம் கொடுத்தால் சரியாகிவிடும் என கூறினார்.
இதற்காக நான் கோயம்புத்தூர் ஆர்எஸ்புரத்தில் இருக்கும் வீடு மற்றும் நகைகளை விற்று அவரிடம் ரூ. 20 லட்சம் கொடுத்தோம். ஆனால், அவர் ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
போலீசார் டாக்டர் விஜயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் வைர பஸ்பம் செய்ய மேற்கொண்டு வழி முறைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசார் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள 27 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் அவரது இரு மகன்களிடமும் போலீசார் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் விஜயகுமாரின் மைலாப்பூர் மருத்துவமனையை மூடியுள்ளனர்.
முதல் வகுப்பு...
இந்தச் சூழ்நிலையில், வருமான வரி செலுத்தி வருவதை அடுத்து டாக்டர் விஜயகுமாருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு மின்விசிறி, மெத்தை, கட்டில், கலர் டிவி, பத்திரிகை ஆகிய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.
காலையில் பொங்கல், மதியம் கூட்டு, பொறியலுடன் சாம்பார், ரசத்துடன் சூடான சோறு வழங்கப்படுகிறது. மேலும் மூன்று நாள் அசைவ உணவு, ஞாயிற்றுக்கிழமை சிக்கன் என அவர் சிறையில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து வருவதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications