மாணவர் சடலத்தை வீட்டில் வீசி சென்ற 2 பெண்கள்-தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரி: திருப்பூர் கல்லூரி மாணவர் ஒருவரின் சடலத்தை காரில் வந்த இரண்டு பெண்கள் அவரது வீட்டின் முன்பு வீசிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் கணபதிபட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சென்னகேசவன். இவர் திருப்பூர் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார்.
இந் நிலையில் அவர் கடந்த 1ம் தேதி ஊருக்கு வருவதாக தந்தையிடம் கூறியிருந்தார். இந்த சமயத்தில் திடீரென அவரது வீட்டின் முன்பாக ஒரு கார் வேகமாக வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய இரண்டு இளம் பெண்கள் டிரைவரின் உதவியுடன் மாணவர் சென்னகேசவனின் சடலத்தை வீட்டு முன்பு போட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதையடுத்து அந்த மாணவனின் தந்தை மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.