திமுக ஆட்சியில் சட்டம் மக்களுக்கு எதிராக பாய்கிறது-வரதராஜன்
திருவாரூர்: தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிட சாதாரண மக்களுக்கு எதிராக அதிகமாக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வரதராஜன் பேசுகையில்,
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல மாதங்களாகியும், இன்று வரை தமிழ் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. அதற்கான எந்த ஒரு செயலையும் இலங்கை அரசு முன்வந்து செய்யவில்லை.
இந்த மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் தமிழர்களுக்கான நியாமான தீர்வு கிடைக்கும்.
இலங்கையில் ஆளும் அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு உரிய வழியை ஏற்படுத்தி தர வேண்டும்.
பணக்காரர்களுக்கு மட்டும் படிப்பு...
தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. சட்டம், ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தடுக்க சட்டம் இயற்றிய தமிழக அரசு, அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிடச் சாதாரண மக்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. இதை மக்கள் நீண்ட காலத்துக்கு அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications